தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நவம்பர் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

9-ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்பாள் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.





இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், செல்வ சித்ரா, அறிவழகன், அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், சாந்தி, பாலசந்தர், ஜெயலட்சுமி, மகேஸ்வரன், மந்திரமூர்த்தி, முருகேஸ்வரி, மகாராஜன், பால குருசாமி, மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தேர்கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்டு 4 ரத வீதி வழியாக வந்து மீண்டும் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தின் போது கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, சிவன் பார்வதி வேடம் அணிவித்து வந்தனர், கரடி, கிங்காங், ஓநாய், மிக்கி மௌஸ் பொம்மைகள் இந்த நிகழ்ச்சியில் பெரும் வரவேற்பை பெற்றனர்.


மேலும், பல்வேறு பாரம்பரிய மேள தாளங்களும் இடம்பெற்றன. பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம், ஆகியோர் செய்திருந்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி சனிக்கிழமை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


