காஞ்சிபுரம் ஸ்ரீ நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் சாமி தரிசனம்
கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகர மைய பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகமானது இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் ஸ்ரீ கணபதி பூஜை,ஸ்ரீ நவகிரக ஹோமம்,தன பூஜை, கோ பூஜை மற்றும் நான்கு கால யாகபூஜைகளுடன் மஹா பூர்ணாஹுதி நிறைவுற்று, பின் மேளத் தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, மங்கள் இசை இசைக்க, பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் யாகசாலையிலி இருந்து புறப்பாடாகி, கோபுர கலசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

பின்னர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் “ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய” என பக்தி முழக்கங்களுடன் மூலவர் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டும், பின் அனைத்து விமானங்கள் மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும் வந்திருந்த அனைத்து பக்தர்களின் மீதும் கும்பாபிஷேக நீரானது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதயகுமார் தலைமையிலான கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


