மதச்சார்பற்ற கொள்கையில் தமிழக வெற்றிக் கழகம் சமரசமில்லை : விஜய் திட்டவட்டம்
மதச்சார்பற்ற கொள்கையில் எப்போதும் சமரசமில்லை என்றும், சமூக நீதி நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில், அக்கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொழுகையிலும் அவர் கலந்துகொண்டார்.
பின்னர் பேசிய விஜய், நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே திட்டமிட்டு பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.

மேலும், மதச்சார்பற்ற கொள்கையில் எப்போதும் சமரசமில்லை என்றும், சமூக நீதி நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய விஜய், “இந்தக் கட்சியுடன் கூட்டணி, அந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நம் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.”
“அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் இல்லை. யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதனை நம்ப வேண்டாம்.”
“எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நமது இலக்கை நம்மால் அடைய முடியும்.”
“இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்” பேசினார்.

