தஞ்சாவூரில் ஊர்ப்புற நூலகர்கள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம்!
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஊர்ப்புற நூலகர்கள் கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில், தஞ்சை மண்டலத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் தஞ்சை மண்டலம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ப.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில், தி.மு.க தேர்தல் அறிக்கை வரிசை எண் 178-ல் கூறியபடி ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து ஊர்ப்புற நூலகங்களையும் தரம் உயர்த்த வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த ஊர்ப்புற நூலகர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.
இந்தப் போராட்டத்தில் தஞ்சை மண்டலத்தை சேர்ந்த ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.

