வட்டிக்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் ஏமாந்த மூதாட்டி
வட்டிக்கு ஆசைப்பட்டு 27 லட்சம் ரூபாயை இழந்து அல்லல்படும், மதுரையைச் சேர்ந்த மூதாட்டி, ஏமாற்று பேர்வழிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக வேதனையுடன் கூறும்போது, அனைவரது இதயங்களையும் உறைய வைத்துள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர்தான் செல்வி. கடந்த 2023 ஆம் ஆண்டு பழனியை சேர்ந்த ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனத்தின் அட்மின் சக்திவேல் என்பவர் மூதாட்டிக்கு அறிமுகமானார். அவர்மூலம் அந்த தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமாரை அறிமுகப்படுத்தினார்.
அப்போது, மூதாட்டியிடம் கூறிய செந்தில்குமார், தான் பழனியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் பெண்களின் வளர்ச்சிக்காக தொழில் சார்ந்த சேவை செய்வது வருவதாகவும், நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் தனது தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் கொடுத்தால் அதற்கு அடுத்த மாதம் முதல், மாதம் இரண்டு சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தையும் கூறியுள்ளார்.
இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய மூதாட்டி செல்வி, தன்னிடம் இருந்த தங்க நகைகளை தேசிய வங்கியில் அடமானமாக வைத்தும், வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்த பணம் மற்றும் கடனாக பெற்று 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தி உள்ளார்.
முதல் இரண்டு மாதங்களுக்கு வட்டியாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வட்டி பணத்தை மூதாட்டி செல்விக்கு கொடுத்திருந்தார் செந்தில்குமார். இந்தநிலையில் தற்போது 19 மாதங்களாகியும் இதுவரை வட்டிப் பணத்தை கொடுக்காமல், மூதாட்டியை ஏமாற்றியது. அவரது குமுறல் வார்த்தையில் இருந்து தெரிகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அந்த மூதாட்டி.
நாள்தோறும் படும் வேதனைகளை வெளியில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை என குமுறிய அந்த மூதாட்டி, ஏமாற்றியவர்கள் தனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும், இதனால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி காவல்துறையிடம் மனு அளித்துள்ளதாகவும் அழுதபடி கூறியது, அங்கிருந்தவர்களின் இதயங்களை உறைய வைத்தது.
ஒருவரின் வார்த்தைகளை நம்பி 27 லட்ச ரூபாயை கொடுத்து ஏமாந்த மூதாட்டிக்கு உரிய தீர்வு கிடைக்குமா?, அவரது வாழ்க்கையில் நிம்மதிக்கு இடம் கிடைக்குமா? பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

