காமராஜர் குறித்து திருச்சி சிவாவின் கருத்திற்கு நாடார் சங்க தலைவர்கள் கண்டனம்
ராமநாதபுரம் தாமரைக்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் வெண்கலச் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடார் சங்க தலைவர்கள், பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவாவின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவச்சிலை திறப்பு விழா, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த தாமரைக்குளம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பனை தொழிலாளர் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாடார் மகாஜன சங்கம் கரிக்கோல்ராஜ், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், ஹரி நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நலிவடைந்த பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கிரேன் மூலமாக பிரமாண்ட மாலையை காமராஜர் சிலைக்கு அணிவிக்கப்பட்டபோது அவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிநாடார், காமராஜரின் புகழை சீர்குலைக்கும் விதமாக பேசிய திருச்சி சிவாவின் வீடு முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாகவும், உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பனை வாரிய தொழிலாளர் சங்க தலைவர் எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெருந்தலைவரின் புகழை கண்ணியத்தை குந்தகம் விளைவிக்கும் அளவு யாரும் பேசக்கூடாது என கேட்டுகொண்டார்.

