ஆடிப்பெருக்கு விழா: காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள் வழிபாடு
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடி காப்பரிசி, காதோலை கருகமணி, மாங்கல்யம் வைத்து பூஜை செய்து வழிபட்டு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தங்கள் திருமணம் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படும் இவ்விழா பெண்களின் விழாவாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடினர். பின்னர், காவிரி தாயை போற்றி காப்பரிசி, காதோலை கருகமணி பழங்கள். மாங்கல்யம் இவற்றை வைத்து பூஜை செய்து பெண்கள் சுற்றி வந்து கற்பூரம் காட்டி வழிப்பட்டனர்.
பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர். மூத்தோர்களிடம் ஆசி பெற்று கொண்ட புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

