ராமநாதபுரத்தில் போலி வாகன பரிசோதனை சான்றிதழ்?
போலி மென்பொருள் மூலம் போலி வாகன புகை பரிசோதனை சான்றிதழ் வழங்குபவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் செயல்பட்டு வரும் வாகன புகை பரிசோதனை மையம் அருகே பெட்டிக்கடை மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் போலியான கணினி மென்பொருள் மூலம் வாகனங்களை பரிசோதனை செய்யாமல் புகைப்படம் மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு சுமார் 3,000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஹரியானா மற்றும் உபி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள புகை பரிசோதனை மையங்களின் மூலம் போலியான வாகன புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
போலி மென்பொருளை பயன்படுத்தி போலி வாகன புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கி வரும் சாயல்குடியில் செயல்பட்டு உரிமம் பெறாத கடைகள் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரது மீதும் போலியான ஆவணங்களை உருவாக்குதல், மோசடி செய்தல் உள்ளிட்ட குற்ற பிரிவுகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அங்கீகாரம் பெற்ற வாகன புகை பரிசோதனை மையம் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷை சந்தித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள ராஜசேகரன் மற்றும் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர்.

