தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 444 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திவ்ய நற்கருணை பவனி
தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444 வது ஆண்டு திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாவை முன்னிட்டு தூய பனிமய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது.
தூய பனிமயமாதா ஆலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திவ்ய நற்கருணை பேழையை தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை கைகளில் ஏந்தி நகர் வளாகம் முழுவதும் பவனியாக கொண்டு வரப்பட்டு தூய பனிமயமாதா ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சிறப்பு நற்கருணை பிரார்த்தனை நடத்தப்பட்டு அருள் ஆசி உரை வழங்கப்பட்டது. இந்த நற்கருணை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதங்களைக் கடந்து கலந்து கொண்டனர்.





இந்த திருவிழாவின் முக்கிய திருவிழாவான 11ஆம் நாள் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி பெருவிழா கூட்டுத் திருப்பலி மேதகு ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை தூய பனிமய மாதாவின் நகர் வீதிகளில் சப்பர பவனி நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதைத்தொடர்ந்து பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



