நத்தம் அருகே திமுக பிரமுகர் படுகொலை: உறவினர்கள் சாலை மறியலால் பதற்றம்!

நத்தம் அருகே திமுக பிரமுகர் படுகொலை: உறவினர்கள் சாலை மறியலால் பதற்றம்!

நத்தம் அருகே திமுக பிரமுகரும் திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரருமான முருகன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருந்தார். மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் வரவு செலவு கணக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே ஜோத்தாம்பட்டி குட்டுபகுதியில் முருகனின் ஸ்கார்ப்பியோ காருக்குள் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றினர்.

பின் திண்டுக்கல்லில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பதற்காக பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட எஸ்பி.பிரதீப் தலைமையிலான காவல்துறையினர், இக்கொலையில் சம்மந்தப்பட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைக்கு கோவில் கணக்கு வழக்கு பிரச்சனை மட்டுமே காரணமா?, தொழில் போட்டி காரணமா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இறந்தவர் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் இறந்தவரின் உறவினர்கள் சாணார்பட்டி காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சாணார்பட்டி போலீசார் உடலை மதுரைக்கு கொண்டு செல்லாமல் திண்டுக்கல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *