காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையாருக்கு சாத்தப்படும் மாலை – பக்தர்கள் வழிபாடு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் நிகழ்வில், திருவீதி உலாவில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையாருக்கு சாத்தப்படும் மாலை காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டது.
163 வது ஆண்டாக ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் அண்ணாமலையார் சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளுக்கு தீபாராதனை செய்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வணங்கி வழிபாடு செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் மிக முக்கிய ஸ்தலமாகவும் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும், திருவண்ணாமலையில் நடைபெறும் திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழாவின் போது உற்சவர் அருணாசலேசுவரருக்கு சாற்றுவதற்காக, காஞ்சிபுரத்திலிருந்து அலங்கார மாலைகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா கார்த்திகை மாத பௌர்ணமியன்று நடைபெறுவது வழக்கம்.

இவ்விழாவின் போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா வரும் போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில், உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்து அம்மாலைகளே சாற்றப்படுகின்றது.
காஞ்சிபுரம் காந்தி ரோடில் உள்ள ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 163 வது ஆண்டாக இந்த அலங்கார மாலைகளை திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வி.கே.குமாரகாளத்தி குத்து விளக்கேற்றி வைத்தும், செயலாளர் பி மாணிக்கவேலு தீபாரதனைகள் செய்து விழாவினை துவக்கி வைத்தனர்.

இதில் மாலைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலங்கார மாலைகளுக்கு தீபாராதனைகளும் காண்பித்தார்.
பின்னர் இந்த மாலைகள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளை வணங்கி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் பிரகாஷ் குமார் பொருளாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

