தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கியில் தங்கம் வென்ற தஞ்சை வீரர்கள் – உற்சாக வரவேற்பு
விசாகப்பட்டினம் தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி: தங்கம் வென்று தஞ்சை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

63-வது தேசிய அளவிலான ஜூனியர் போட்டி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 63-வது தேசிய அளவிலான ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தஞ்சை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 5-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற இந்த தேசிய அளவிலான போட்டியில், ஹரியானா, சண்டிகர், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சேர்ந்த 120 அணிகள் பங்கேற்றன.

தமிழக அணிகள் பங்கேற்பு
இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பில் 8 அணிகள் களமிறங்கின. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி மைதானத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தஞ்சை திரும்பிய வீரர்களுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு
தஞ்சை திரும்பிய வெற்றி வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
