காஞ்சிபுரம் ஏனாத்தூரில் தேசிய சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான சாஸ்திர சங்கமம்

தேசிய சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான சாஸ்திர சங்கமம் தொடங்கியது : 26 மாநிலத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

டெல்லி மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் 63-வது அகில பாரதிய சாஸ்திர சங்கமம் (2025-26), காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயாவில் மிகச் சிறப்பாகத் தொடங்கியது.
மார்ச் 13 வரை நடைபெறவுள்ள இந்த மாபெரும் தேசிய நிகழ்வில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடனும் தலைமையிலும் தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீனிவாச வரகேடி மற்றும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயாவின் வேந்தர் பேராசிரியர் வேம்படி குடும்ப சாஸ்திரி, கர்நாடக சமஸ்கிருதப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். அகல்யா, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹாவித்யாலயாவின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி. ஸ்ரீநிவாசு மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேதப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ராணி சதாசிவ மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்தத் தேசிய அளவிலான சாஸ்திர சங்கமத்தில் இந்தியாவின் 26 மாநிலங்களிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இதில் மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்த உள்ளனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் நிறைவு விழா மார்ச் 13 அன்று நடைபெற உள்ளது.
சமஸ்கிருத மொழி மற்றும் சாஸ்திரக் கல்வியைப் போற்றும் வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்வு, இந்திய கலாச்சாரத்தின் பெருமையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


