நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் சென்னையில் இன்று காலமானார்
நாகாலாந்து ஆளுநரும் பா.ஜ.க.-வின், முன்னாள் தலைவருமான இல.கணேசன் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
நாகாலாந்து ஆளுநராக இருந்தாலும், அவ்வப்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து தங்குவது இல.கணேசனின் வழக்கம். சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில், நீரிழிவு நோயால் பாதத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை பெற்றார்.
பின், வீட்டில் ஓய்வில் இருந்தபோது, கடந்த 5ம் தேதி, கால் மரத்துப்போன நிலையில் இல.கணேசன் மயங்கி விழுந்தார். கடந்த 8 ம் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் மற்றும் வாந்தி உணர்வு ஏற்பட்டது.
இதனால், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தீவிர கண்காணிப்பு பிரிவில் இல.கணேசன் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது. அன்னாரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

