பொன்னேரி அருகே கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
 
					புதிய வீடு கட்டுவதற்காக கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, சுவர் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சயனாவரம் கிராமத்தில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்காக பழைய வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
வழக்கம் போல தொழிலாளர்கள் வீட்டின் சுவற்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து அங்கிருந்த தினேஷ்குமார் (23) என்ற தொழிலாளி மீது விழுந்தது.
இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து இறந்த தொழிலாளியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சவகிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மீது சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
			 
			 
			 
			 
			