ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளராக ஜிபிஎஸ் கே. நாகேந்திரன் போட்டி!
“ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியும்” என ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ஜிபிஎஸ் கே. நாகேந்திரன் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக வேட்பாளராக ஜிபிஎஸ் கே.நாகேந்திரன்(57) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.எஸ்.சி., எம்.பி.ஏ., படித்துள்ளார். ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை கே.கே.நகரில் வசிக்கிறார். இவர் தென்மாநில அளவில் மடிக்கணினி விற்பனை தொழில் செய்து வருகிறார். பாஜகவில் 20 ஆண்டுகளாக உறுப்பினராகவும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகவும், முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார்.
இவரது மனைவி வித்யா தேவி, மகள் நிவேதா எம்.பி.பி.எஸ்., படித்து, எம்.டி., படித்து வருகிறார். மகன் நிஷாந்த் லண்டனில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். இவர் ராமநாதபுரம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
இவருக்கு ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் உத்தரகோசமங்கை மற்றும் பாஜக அலுவலகம் ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயம் ஆகிய பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் வேட்பாளர் ஜிபிஎஸ் நாகேந்திரன் கூறுகையில், “ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியும். இந்த முறை பாஜகவிற்கு நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.” இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், “தி.மு.க ஆட்சியில் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். மீனவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளார்கள். விவசாயிகள் நெசவாளர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளார்கள் ஆகவே வரும் சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்பி அதிமுக கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க உள்ளார்கள். சென்ற இடங்கள் எல்லாம் அமோக வரவேற்பு பொதுமக்களால் கொடுக்கப்படுகிறது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

