தூத்துக்குடி: சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஞானம் அறிவு செல்வத்தின் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமானை சதுர்த்தியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.
மேலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு அவற்றை கடல் மற்றும் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்வார்கள்.

இதற்காக தூத்துக்குடி முத்தையாபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 6 அங்குலம் முதல் 9 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் கலை அம்சத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி நீர்நிலைகள் மாசு படுவதை தடுக்கும் வகையில் சுண்ணாம்பு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்து வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் சிலைகள் மீது வண்ணம் ஏற்ற பயன்படுத்தப்படுகின்றன.
ஆண்டுதோறும் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து வரும் அமைப்பாளர் ராகவேந்திரா கூறுகையில். தூத்துக்குடி மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்ட செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் நாடு நலமாக இருக்க, நாட்டு மக்கள் நலமாக இருக்க, விவசாயம் செழிக்க கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரம், வேம்பார், திருச்செந்தூர் மற்றும் குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்கபடுகிறது.

