காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் இணைந்து பள்ளி செல்லும் சிறார்களின் அரையாண்டு விடுமுறையை ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ள வகையில் அமைய வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில் மாநில அளவிலான குளிர்கால கலைப்பயிற்சி முகாம் 25.12.2025 முதல் 03.01.2026 வரை 10 நாட்கள் நடைபெற்றது.
இதில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து 100 சிறார்கள் பயிற்சி பெற்றனர்.

சதாவரத்தில் உள்ள செவித்திறன் குறைவுடையோருக்கான உயர் நிலைப் பள்ளியில் இப்பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையேற்று 10 நாட்கள் சிறார்கள் பெற்ற பயிற்சியின் போது வரைந்த ஓவியங்கள் மற்றும் கைவினை பொருள்கள் கண்காட்சியினை திறந்து வைத்தும், குரலிசை, பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புறக் கலை (கைச்சிலம்பம்) நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பயிற்சி பெற்ற சிறார்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கலை பண்பாட்டுத் துறை காஞ்சிபுரம் மண்டல உதவி இயக்குநர் திரு.ஆ.க.கார்த்திகேயன், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.நா.இரமணி மற்றும் பிற அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.




