காஞ்சிபுரம் அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா விழா – நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
காஞ்சிபுரம் அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா விழா: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

களக்காட்டூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையான ஆருத்ரா வழிபாடு
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஏரிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
நடராஜருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்
ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு பழ வகைகள், வாசனைத் திரவியங்கள், தேன், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு வண்ண மலர்கள் மற்றும் வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தூப, தீப ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது.

பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஆருத்ரா விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் களக்காட்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.
விழா உபயத்தை வழக்கறிஞர் செல்லப்பா சிறப்பாக செய்திருந்தார். ஆலய நிர்வாகி ராஜேந்திரன், பக்தர்களுடன் இணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
