சுவாமிமலை சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம் – பக்தர்கள் தரிசனம்
சுவாமிமலையில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்!
திரளான பக்தர்கள் தரிசனம்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி விழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் எதிர்வரும் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.
