7 மாதங்களாக நிழற்குடை அமைக்காததை கண்டித்து மே 18-ல் அறப்போராட்டம் – காங்கிரஸ் மாநில செயலாளர் அறிவிப்பு
- ஆர்.காவனூர் கிராம மக்களுக்கான பேருந்து நிழற்குடை கோரிக்கை நிறைவேறாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்!
- 7 மாதங்களாக நிழற்குடை அமைக்காததை கண்டித்து மே 18-ல் அறப்போராட்டம் – காங்கிரஸ் மாநில செயலாளர் அறிவிப்பு!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூர் கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, வரும் மே 18-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான அறப்போராட்டம் நடைபெறும் என அடையாறு பாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவில், ஆர்.காவனூர் கிராம மக்களின் வசதிக்காக இரண்டு பேருந்து நிழற்குடைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இயற்கை எரிவாயு நிர்வாக நிதியிலிருந்து தொடக்க கட்டமாக ரூ.20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 25.11.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தும், இதுவரை எந்த பணியும் தொடங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, செயற்பொறியாளர் மற்றும் உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் வரும் மே 18-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அடையாறு பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
