“மனதில் உறுதி வேண்டும்” – காஞ்சிபுரத்தில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள், பெற்றோருக்கு முக்கிய ஆலோசனை!
- “தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கல்வியை தேர்வு செய்ய வேண்டும்” – கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேச்சு
- காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோருக்கு முக்கிய ஆலோசனைகள்

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் “மனதில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் ஜி. தாமோதரன் தலைமை வகித்த நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் டி. கோமதி, பள்ளியின் செயலாளர் டி. வித்யாசங்கர், பொருளாளர் டி. ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் தாளாளர் டி. ஜெயசங்கர் வரவேற்று பேசுகையில், இந்த கல்வியாண்டு முதல் பள்ளியில் AI தொழில்நுட்ப வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து ரெயின்போ AI தொழில்நுட்ப அமைப்பின் இயக்குநர் எஸ். அய்யப்பன், ஏஐ தொழில்நுட்ப படிப்புகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. நளினி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், “மாணவர்கள் தங்களின் இலக்குகளையும் குறிக்கோள்களையும் தெளிவாக நிர்ணயித்து அதற்காக தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

விழாவில் சிறப்புரையாற்றிய கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில், “எந்தப் படிப்பை தேர்வு செய்தாலும் அதனுடன் AI தொழில்நுட்ப கல்வியையும் இணைத்து கற்க வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கல்வியை தேர்வு செய்வது அவசியம்” என்றார்.
மேலும், மீன்வளத்துறை, கால்நடைத் துறை, கண் நோயியல், செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
