டோலி தூக்கும் அவலம் – திருவண்ணாமலை அருகே கிராம மக்கள் வேதனை!
திருவண்ணாமலை அருகே போக்குவரத்து வசதி இல்லாத 4 கிலோமீட்டர் தூரம் சாலையை சரி செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாததால்
தொடரும் அவலம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் கோவிலூர் ஊராட்சி பால்வாரி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை சாலையில் நடந்து சொல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றது. சமூக ஆர்வலர் ஒருவர் ஜமுனாமராத்தூர் காவல் நிலைத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் அண்ணாமலையின் உடலை கைப்பற்றி ஜமுனைமரத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜமுனாமரத்தூரில் முதலுதவி செய்யப்பட்டு, போளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அண்ணாமலை உயிரிழந்தார். போளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
பால்வாரி கிராம மக்களுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் அமரர் ஊர்தி நான்கு கிலோமீட்டர் முன்பே நிறுத்தி உடலை இறக்கி விட்டு சென்றது. இறந்தவரின் உடலை பால்வாரி கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர்.
கர்ப்பிணிப் பெண்களும் முதியோர்களும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் டோலி கட்டி எடுத்துச் செல்லும் அவலமான நிலை தொடர்ந்து நிலவுகிறது.
4 கிலோமீட்டர் தூரம் சாலை வசதி இல்லாததால் தொடர் கதையாக டோலி தூக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கிராம மக்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
