பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லாவுக்கு தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா கடும் கண்டனம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லாவுக்கு தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா கடும் கண்டனம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஜவாஹிருல்லாவுக்கு தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா கடும் கண்டனம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ள கருத்துகளுக்கு, தமிழக வெற்றிக் கழக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. மதார் பதுருதின் என்கிற வி.எம்.எஸ். முஸ்தபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசிய விவகாரம், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தேவை, மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியது தொடர்பாக ஜவாஹிருல்லா விமர்சனம் செய்திருப்பதாகவும், இதற்காக முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவர் ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தியுள்ளதாகவும் முஸ்தபா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஏற்கெனவே தனது உடல்மொழி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளதாகவும், அது தற்செயலான வெளிப்பாடு என்றும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து பெரிதுபடுத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சியாக இருப்பதாகவும் முஸ்தபா குற்றம்சாட்டியுள்ளார்.

“அரசியல் மாண்பு கொண்டவர் முதலமைச்சர்”

சட்டப்பேரவையில் கலைஞர் பெயர் குறிப்பிடப்பட்டபோது உடனடியாக எழுந்து மன்னிப்பு கேட்டவர் முதலமைச்சர் என்றும், இது அவரது அரசியல் மாண்பையும் முதிர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ள நிலையில், இதற்காக மீண்டும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கோருவது மனிதநேய மக்கள் கட்சிக்கு அழகல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான வேறு ஒரு சர்ச்சையையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள முஸ்தபா, அரசியல் ரீதியாக மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கோரலாம் என தெரிவித்துள்ளார்.

புதிய தலைமைச் செயலகம்: ஜவாஹிருல்லாவின் எதிர்ப்புக்கு கேள்வி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக ஜவாஹிருல்லா தெரிவித்த கருத்துகளுக்கும் முஸ்தபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், ஜார்ஜ் கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை என்றும் கூறி திட்டத்தை கைவிட வேண்டும் என ஜவாஹிருல்லா தெரிவித்ததாக முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்பட்ட இடநெருக்கடி காரணமாகவே முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டப்பட்டு 2010-ஆம் ஆண்டு திறக்கப்பட்டதை அவர் நினைவூட்டியுள்ளார்.

“16 ஆண்டுகளுக்குப் பிறகு இடநெருக்கடி அதிகரித்திருக்காதா?”

2010-ஆம் ஆண்டிலேயே தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த இடநெருக்கடி எந்த அளவுக்கு அதிகரித்திருக்கும் என்பதை ஜவாஹிருல்லா ஏன் கருத்தில் கொள்ளவில்லை என முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், இடநெருக்கடியை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகை அல்லது கிண்டி பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்று பேசியதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜவாஹிருல்லா அந்த கருத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

பேனா நினைவுச் சின்ன விவகாரத்தையும் சுட்டிக்காட்டி விமர்சனம்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக கடலுக்கு நடுவே பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோது, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்ததாக முஸ்தபா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைப்பதால் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும், படகுகளின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அப்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புயல், கடல் சீற்றம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது கடலுக்குள் அமைக்கப்படும் கட்டுமானத்தின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், பொதுமக்களின் வரிப்பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் ஜவாஹிருல்லா இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்ததாகவும், தற்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை காரணம் காட்டி புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்றும் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

“திடீரென மீனவர்கள் மீது பாசம் ஏன்?”

புதிய தலைமைச் செயலகம் தொடர்பான விவகாரத்தில் திடீரென மீனவர்கள் மீது ஜவாஹிருல்லாவுக்கு அக்கறை ஏற்பட்டது ஏன் என்றும் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் முஸ்தபா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களுக்கான நிதியுதவி குறித்து தவெக அரசு நடவடிக்கை

2026-ஆம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டில், மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரசு நிதியுதவி ரூ.6,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மீனவர் சமூகத்தின் நலனில் தமிழக வெற்றிக் கழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், உண்மையான மீனவ நண்பன் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எதிர்ப்பதற்காக எதிர்ப்பது அரசியல் அல்ல”

தனது கண்டன அறிக்கையின் இறுதியில், எதிர்ப்பதற்காக எதிர்ப்பது அரசியல் அல்ல என்று முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஒரு திட்டத்தில் குறைகள் இருந்தால் அவற்றை சுட்டிக்காட்டுவதுடன், அதற்கான மாற்றுத் தீர்வுகளையும் முன்வைப்பதே பொறுப்பான அரசியல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கருத்துகளை தெரிவிக்க வேண்டும் எனவும் முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *