பொறியியல் படிப்பு கவுன்சிலிங் ஜூலை 7-ல் தொடக்கம்!
பொறியியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை வெளியிட்ட அமைச்சர் கோவி. செழியன், ஜூலை 7ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் கீழ், 463 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. 2025 – 26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்றது.
இதில், 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 2,49,883 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். 2,26,359 மாணவர்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது என்றும், பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஜூலை 14ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி முடிவடைகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அமைச்சர் பேசியதாவது, “சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
துணைப் பிரிவு கவுன்சிலிங் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடக்கிறது.
மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

