கீழே கிடந்த தங்கத் தாலியை நேர்மையுடன் ஒப்படைத்த காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை ஊழியர்
கீழே கிடந்த தங்கத் தாலியை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு மருத்துவமனை ஊழியர் – காவல் ஆய்வாளர் பாராட்டு
தவறவிட்ட தாலியை உரியவரிடம் ஒப்படைத்த பெண் தலைமை காவலர்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தவறவிட்ட தங்கத் தாலியை கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியரின் நேர்மையைப் பாராட்டி காவல் ஆய்வாளர் வெகுமதி வழங்கினார்.
மருத்துவமனைக்கு வந்தபோது தாலியை தவறவிட்ட பெண்

கடந்த 11.02.2026 அன்று ஒளிமுகமதுபேட்டையைச் சேர்ந்த பிரியா என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தனது தங்கத் தாலியை தவறவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் கீழே கிடந்த தங்கத் தாலியை அங்கு பணிபுரிந்து வந்த ரயில்வே ரோடு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாரதி, தந்தை பெயர் ஆதி, என்பவர் கண்டெடுத்தார்.
காவல்துறையிடம் ஒப்படைத்தார்
கிடைத்த தங்கத் தாலியை தன்னிடம் வைத்துக் கொள்ளாமல், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அயல் பணியில் இருந்த விஷ்ணு காஞ்சி காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி முருகேஸ்வரியிடம் பாரதி ஒப்படைத்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தாலியின் உரிமையாளரை கண்டறிந்தனர். பின்னர் தவறவிட்ட நகை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
நேர்மையைப் பாராட்டி வெகுமதி
தவறவிட்ட நகையை உரியவரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்த பெண் தலைமை காவலர் திருமதி முருகேஸ்வரி மற்றும் கீழே கிடந்த தங்கத் தாலியை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்த அரசு மருத்துவமனை ஊழியர் பாரதி ஆகியோரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்தன.
விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் திரு. சங்கர சுப்பிரமணியன், இருவரையும் நேரில் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
தனக்குக் கிடைத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த பாரதியின் நேர்மை மற்றும் காவல்துறையினரின் முயற்சியால் தவறவிட்ட நகை உரிமையாளரிடம் மீண்டும் சேர்க்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
