சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 5 பேர் பலி
விருதுநகர் அருகே உள்ள சின்னக்காமன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகேயுள்ள சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பணிகள் தொடங்கிய பொழுது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அப்போது அங்கிருந்த மூன்று அறைகள் தரைமட்டமாகின. அந்த பகுதியில் புகை மூட்டம் வானுயர சூழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டுள்ள தீயணைப்புத் துறையினர் உள்ளே மேலும் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வெடிவிபத்து சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

