அதிநவீன சிசிடிவி கேமராக்கள் – DSP பாஸ்கரன் உறுதி!
கீழக்கரை காவல்துறை உட்கோட்ட பகுதி முழுவதும் 100 சதவீதம் சிசிடிவி பொருத்தப்படும் டிஎஸ்பி பாஸ்கரன் உறுதி அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள காடு காவல்காரன் வலசை பகுதி முழுவதும் காவல்துறை அறிவுறுத்தலின் பெயரில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கீழக்கரை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், “கீழக்கரை உட்கோட்ட பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காடு காவல் காரன் வலசை பகுதியில் சுமார் 10 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது”.
தொடர்ந்து பேசிய அவர், “சிசிடிவி கேமரா என்பது மூன்றாவது கண் என கருதப்படுவதால் குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் குற்ற சம்பவங்கள் நடந்த பின்பு கேமராவின் பதிவுகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்படுகிறது”.
“ஆகையால் கீழக்கரை உட்கோட்ட பகுதி முழுவதும் 100% சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பகுதியாக விரைவில் உருவாக்க பணியாற்றி வருகிறோம். இன்னும் சிசிடிவி கேமரா பொருத்தப்படாத பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறோம். வீடுகள் வணிக நிறுவனங்கள் பொது இடங்களில் அவசியம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்களின் ஒத்துழைப்போடு செய்யப்பட்டு வருகிறது”.
“தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் அதிகளவு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதியாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது” என டிஎஸ்பி பாஸ்கரன் தெரிவித்தார்.
அப்போது, திருப்புல்லாணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ், காடு காவல்காரன் வலசை பகுதியைச் சேர்ந்த பழனி குமார்
முருகன், மதியழகன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

