தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும்.
இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டு 443-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக துவங்கியது.
பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினர்.

அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் தலைமையில் 2 ADSP, 1 ASP, 5 DSP, 15ஆய்வாளர்கள், 35 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிழாவில், அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்பு.
விழாவின் ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மற்றும் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

