ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள்; அரசு மருத்துவமனைகளில் தயார்
வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில்,வ்சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெப்ப பக்கவாதம் பாதிப்புக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப பக்கவாதம் மற்றும் வெப்ப பாதிப்புகளுக்கெனத் தனிச் சிறப்பு வார்டுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெப்ப பக்கவாதம் என்பது உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டை இழந்து, மயக்கம், தலைசுற்றல், நீர்ச்சத்து குறைபாடு போன்ற அறிகுறிகளுடன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை ஆகும். கட்டுமான தொழிலாளர்கள், விவசாயிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை காரணமாக இந்த சிறப்பு வார்டுகள் முழு செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ராஜிவ் காந்தி , ராயப்பேட்டை , கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய அரசு மருத்துவமனைகளில் IV திரவங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருக்கவும், போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
