காஞ்சிபுரத்தில் தமிழ்ச்சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சார்பில் தமிழ்ச்சான்றோர்கள் 39 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தெய்வத்தமிழ் மாமன்றத்தின் 4 வது ஆண்டு விழாவையொட்டி திருமுறைப் பெருவிழா என்ற பெயரில் தமிழ்ச்சான்றோர்கள் 39 பேருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாமன்றத்தின் தலைவர் கு.ராமலிங்கம் தலைமை வகித்தார்.
விழா நடைபெறும் சி.அருணை வடிவேல் முதலியார் தமிழ் அரங்கத்தினை காஞ்சிபுரம் சிவனடியார் திருக்கூட்டத்தின் தலைவர் எம்.எஸ்.பூவேந்தன் திறந்து வைத்தார்.
விழாவிற்கு புலவர் சரவண.சதாசிவம், வி.எம்.சங்கரன், டி.எஸ்.உமேஷ், பேராசிரியர் அமுத இளவழகன், சிவனடியார் திருக்கூட்ட துணைத் தலைவர் ஈசான ஜோதிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாமன்றத்தின் பொதுச்செயலாளர் சி.குப்புச்சாமி வரவேற்றார்.
விழாவில் ப.சண்முக சுந்தர தேசிகர், கு.சாமி நாத தேசிகர், கதிர்வேல் சுப்பிரமணி ஓதுவார், எம்.எஸ்.பூவேந்தன், ஜெ.மகா தேவன், சிவ.சண்முகசுந்தரம் உட்பட மொத்தம் 39 தமிழ்ச்சான்றோர்களுக்கு தெய்வத்தமிழ் மாமன்றத்தின் சார்பில் வாழ் நாள் விருது வழங்கப்பட்டது.
விருதினை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் சான்றோர்களுக்கு சால்வையும், பதக்கமும் அணிவித்து விருதுகளை வழங்கினார்.

முன்னதாக காஞ்சிபுரம் கோயில்களில் பணிபுரியும் ஓதுவார்கள் ஆடலரசு, செல்வக்குமார், தமிழ்ச்செல்வன், லோகநாதன்,
அருண்குமார், நமச் சிவாயம் ஆகியோருக்கு ரூ.1000 பொற்கிழியும் தெய்வத் தமிழ் மாமன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகிகள் மாணிக்கம், கன்னியப்பன், தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


