அரசுப் பள்ளிகளில் ரூ.20 கோடி செலவில் அதிநவீன வசதிகள் – ரோட்டரி ஆளுநர் ஜே.கார்த்திக்

அரசுப் பள்ளிகளில் ரூ.20 கோடி செலவில் அதிநவீன வசதிகள் – ரோட்டரி ஆளுநர் ஜே.கார்த்திக்

அரசுப் பள்ளிகளில் அதிநவீன வசதிகளோடு கழிப்பிடம் மற்றும் டிஜிட்டல் வகுப்பறைகள், வளர் இளம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி என ரூ.20 கோடி மதிப்பீட்டில் ரோட்டரி சங்கம் மூலமாக சமூக நல மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் ஜே.கார்த்திக் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

“மதுரை, திருச்சி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய எட்டு மாவட்டங்கள் சேர்ந்து ‘ரோட்டரி மாவட்டம் 3000’ என அழைக்கப்படுகின்றன. 150 கிளப்களோடு, 7,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

2025 ஜூலை 1 முதல், அடுத்த ஆண்டு ஜூன் 30 வரையிலான காலம் ‘ரோட்டரி ட்ரீம் ஆண்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘சமூக வளர்ச்சிக்கான எதிர்கால கனவுகளை முன்னோக்கி எடுத்துச் சென்று, செயல்படுத்த வேண்டும்’ என்பது இந்த ஆண்டின் நோக்கம்.

இந்தாண்டில், மேற்கண்ட 8 மாவட்டங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சமூக நலப்பணிகள் செய்யப்பட உள்ளன. சமீபகலமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

அதன் அங்கமாக, 15 ஆயிரம் வளரிளம் பெண்களுக்கு, ‘கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி’ செலுத்தப்பட உள்ளது. இந்த ஊசி ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 4,000 மதிப்புடையது. 15,000 வளரிளம் பெண்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில், பள்ளி கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி இந்த ஊசி செலுத்தப்பட உள்ளது

மேலும், அரசுப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியம், சுகாதாரத்தை மேம்படுத்த, 50 பள்ளிகளில் அதிநவீன வசதிகளோடு கழிப்பறைகள் கட்டித் தரப்பட உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.7.50 லட்சம் வீதமாக 3.75 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் நடக்க உள்ளன.

அதேபோல, பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் வீதம் 50 பள்ளிகளில், ரூ.1.25 கோடி செலவில் அதி நவீன டிஜிட்டல் தொடுதுறை பலகைகள் அமைத்து தரப்பட உள்ளன. தனியார் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு இணையாக இந்த வசதிகள் மேம்படுத்தி தரப்பட உள்ளன.

மேலும் 10 கோடி ரூபாய் மதிப்பில் நவீன தகன எரிவாயு மையம், பல்வேறு விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்த உள் விளையாட்டு அரங்கம், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மலிவு வாடகையில் சமுதாயக்கூடம் மற்றும் மாணவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்த கலந்தாய்வுகள், கருத்தரங்குகள் நடத்த ஆடிட்டோரியமும் கட்டித் தரப்பட உள்ளது. இதற்கான இடங்கள் விரைவாக தேர்வு செய்யப்பட உள்ளன அதற்கான முன்னேற்பாடு வேலைகளும் தொடங்கி விட்டன.

இது தவிரவும் மாணவர் நலம், பெண்கள் நலம், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு 7 மாதங்களில், 7 சமூக நல திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு இந்த ஓராண்டில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சமூக நலத்திட்ட பணிகளை ரோட்டரி சங்கம் மூலமாக செய்ய இருக்கிறோம். ரோட்டரி உறுப்பினர்களின் நிதி பங்களிப்போடு இப்பணிகள் செய்யப்பட உள்ளன.

உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தி, இந்த ஆண்டில் மட்டும் 1,500 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களோடு பல்வேறு கிளப்புகளும் உருவாக்கப்பட உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாவட்ட உதவி பயிற்றுனர் அழகப்பன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், ராமனாதன், ஆன்டனி பிரேம்குமார், உதவி ஆளுநர் நெல்லை பாலு, ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் கதிரவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *