சுவாமிமலையில் திருத்தேரோட்டம் – “அரோகரா” கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த தேர்விழா
சுவாமிமலையில் திருத்தேரோட்டம்!
“அரோகரா” கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த தேர்விழா!!

கும்பகோணம் அருகே அமைந்துள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு இன்று திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த 10 நாள் பெருவிழா, கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் திருத்தேரோட்டத்தில், சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் “வெற்றிவேல் முருகன்”, “அரோகரா” என பக்தி கோஷம் முழங்க, நான்கு வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக 10ஆம் நாளான நாளை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
