‘பொருள் தேடுவதைவிட அருள் தேடுவதே சிறப்பு’ – உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு

‘பொருள் தேடுவதைவிட அருள் தேடுவதே சிறப்பு’ – உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு

பொருள் தேடுவதை விட அருள் தேடுவதே சிறப்பு என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீ யோகீஸ்வர மகரிஷியின் ஜெயந்தி விழாவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெரியகாஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ளது சுக்லயஜூர் வேத சாஸ்திர பாடசாலை.

இப்பாடசாலையில் ஸ்ரீயோகீஸ்வர மகரிஷியின் 116 வது ஜெயந்தி விழாவையொட்டி நவசண்டி மகா ஹோம், வேத பாட சாலையில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா ஆகியன நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற நவசண்டி மகா ஹோமம் காளஹஸ்தியை சேர்ந்த சுதாகர் சர்மா தலைமையில் 68 சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.

ஹோமத்தில் மூலிகைகள், பட்டுப்புடவைகள், தங்க திருமாங்கல்யம், தங்க வளையல், மூக்குத்தி ஆகியனவும் சமர்ப்பணம் செய்யப்பட்டது. ஹோமத்திற்கு பின்னர் ஸ்ரீயோகீஸ்வர மகரிஷிக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பாடசாலையில் வேதத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா பாட சாலை அறக்கட்டளையின் தலைவர் பி.கணபதி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் எஸ்.குமார், பொருளாளர் ஆர்.வேணுகோபாலன், நிர்வாகி இ.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்.ஏ.பி.தனஞ்சய கணபாடிகள் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என்.பிரகாஷ் கலந்து கொண்டு பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியபோது. “செயற்கை நுண்ணறிவு நாம் செய்வதை எல்லாம் செய்கிறது. ஆனால் வேதம் படிப்பது என்பது செயற்கை நுண்ணறிவை விட சிறந்தது.வேதம் படிப்பவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது.”

“பொருள் தேடுவதை விட அருளைத் தேடுவது தான் சிறப்பு. உலக அளவில் 20 சதவிகிதம் பேர் மன அழுத்தத்திலேயே வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வேதம் படித்தால் ஓரளவேனும் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியும்” என்று பேசினார்.

விழாவில் தேசிய திறந்த வெளிப்பல்கலை மூலம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 4 பேருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேதப்படிப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற ஜி.மோகன், ஜி.மௌலி, புனித் பவன் மூர்த்தி ஆகியோருக்கு கேடயமும், பரிசுப் பொருளும் வழங்கப்பட்டது. பாடசாலை ஆசிரியர் ஆர்.ரங்கநாதன் நன்றி கூறினார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *