பரமக்குடியில் சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை – போலீசார் வழக்கு பதிவு
பரமக்குடியில் சுமைதூக்கும் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் சித்திரை கண்ணன் (48) இவர் சுமை தூக்கும் பணியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவ நாளான ( 18/05/2025) நேற்று மாலைஇரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் கையில் வாளுடன் போர்டிங் ரோடு பகுதியில் விரட்டி வந்துள்ளனர்.
உடனே கண்ணன் அப்பகுதியில் இருந்த கமிசன் கடைக்குள் ஓடி நுழைந்துள்ளார். உடனே அந்த மோட்டார் சைக்கிள் வந்த இருவரும் கையில் வைத்திருந்த வாளால் சித்திரை கண்ணனை கழுத்திலும் கையிலும் சரமாரியாக வெட்டினர்.

இதில் சித்திரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதை பார்த்த கமிஷன் கடைக்குள் இருந்தவர் அலறி அடித்து வெளியில் ஓடி வந்துள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பரமக்குடி டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த சித்திரை கண்ணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

