ரோலர் ஸ்கேட்டிங் சாதனை படைத்து 4 வயது சிறுவன் விழிப்புணர்வு
அனைவருக்கும் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஜேடன் மேத்யூ என்ற 4 வயது சிறுவன் தஞ்சை சாலையில் ரோலர் ஸ்கேட்டிங் சென்று 3 கிலோ மீட்டர் தூரத்தை 10 நிமிடத்திற்குள் கடந்து இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

தஞ்சையை சேர்ந்த சாலமன் ராஜா, சுஜிதா தம்பதியினரின் 4 வயது மகன் ஜேடன் மேத்யூ.
ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்ற இந்த மாணவன், அனைவருக்கும் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை சாலையில் ரோலர் ஸ்கேட்டிங் சென்று சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் இருந்து தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாமன்ற உறுப்பினர் செந்தில்குமாரி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். மாணவன் ஜேடன் மேத்யூ மருத்துவக் கல்லூரி சாலை, பிள்ளையார் பட்டி ரவுண்டானா, வழியாக சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறைவு செய்தான்.
3 கிலோ மீட்டர் தூரத்தை 10 நிமிடத்திற்குள் கடந்து இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தான். அப்போது, சாதனை படைத்த சிறுவனை பாராட்டிய தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், சாதனை சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.

