பொன்னேரி அருகே திருமணம் முடிந்த கையோடு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மணமகன்
பொன்னேரி அருகே திருமணம் முடிந்தஉடன், வீடு கூட செல்லாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மணமகன்களின் செயல்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இன்று காலை திருமணம் நடைபெற்ற நிலையில், வீட்டிற்கு கூட செல்லாமல் புதுமண தம்பதியினர் நேரடியாக தங்களது ஜனநாயக கடமையாற்ற வந்தனர். அரியன்வாயல் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மணமகன் சுபாஷ் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

இதே போல மீஞ்சூரை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணிற்கும் நெய்தவாயல் கிராமத்தை சேர்ந்த விஷால் என்ற இளைஞருக்கும் இன்று காலை மீஞ்சூரில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் விஷால் தனது மனைவி மோனிஷாவை அழைத்துக் கொண்டு நெய்தவாயல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அடுத்தடுத்து புதுமண தம்பதிகள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திய சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
